மெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்!
பொங்கலுக்குப் பிறகு திரைப்படம் பார்க்கும் சூழ்நிலை.விருப்பமில்லாமல் அதுவும் இரவுக்காட்சி.பனிரெண்டு மணிக்கு முடியும்.படம் பார்த்து திரும்பும்போது சந்தோஷமாக உணர்ந்தேன்.காரணம் மெரினாவின் நகைச்சுவை மட்டுமல்ல! சென்னையில் மாணவன் கொலை செய்த விவகாரத்தில் பலரும் சினிமாவை குறை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.அதில் உண்மை இருக்கிறது என்பது வேறு விஷயம்.தனிப்பதிவாக எழுத வேண்டிய விஷயமும் கூட! கொலை செய்வதை பெருமையாக காட்டும் சினிமா,குடித்துக்கொண்டே நாட்டுக்கு நல்லது சொல்லும் நாயகர்கள் இன்னும் இன்னும்.....
மெரினாவில் சுண்டல் விற்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்யாண குணங்களை சொல்கிறது மெரினா.கண்டெடுத்த நகையை உரியவர்களிடம் அடையாளம் கேட்டு ஒப்படைக்கும் சிறுவன்.இவனைத்தானே இன்றைய குழந்தைகள் பின்பற்ற வேண்டும்.அடுத்தவன் பணத்தை எப்போது சுருட்டலாம் என்று குழந்தைகளின் முன்னால் திட்டமிடும் சூழலில் இதெல்லாம் கற்பிக்கப்படவேண்டிய விஷயம்.மருத்துவ உதவிக்கு பணம் பெற்று வழங்குவது,தாத்தாவின் உடலை வாங்க போராடுவது,நண்பனுக்காக ஏங்குவது என்று தமிழ் சினிமா சிறுவர்களுக்கு கற்பிக்கும் நல்ல விஷயங்கள் அதிகம்.பிச்சை எடுக்க வேண்டாம் நான் காப்பாற்றுகிறேன் என்று பாண்டி சொல்கிறான்.
முதியவர்களை தெருவில் விடும் பிள்ளைகள் அதிகரிக்கும் சூழலில் தாத்தா,பாட்டி மீது பேரக்குழந்தைகளுக்காவது பாசம் தோன்றும்.படம் முழுக்க அன்பும்,உதவும் குணமும் நெகிழ்ச்சியுமாக நகர்கிறது.நகைச்சுவையாகவும்தான்.பரிசு வழங்க தன்னை அழைக்க வேண்டுமென விரும்பும் தாத்தா.அந்த சூழலின் இயல்பான உளவியல்.சிறுவர்களுடன் தனக்குள்ள உறவில் நிச்சயம் அப்படியான எதிர்பார்ப்பு தோன்றவே செய்யும்.உயிருக்குயிரான தமிழ் சினிமா காதலை தாண்டி நிஜமான காதலை!? காட்டுகிறது படம்.நகைச்சுவைக்காக என்றாலும் பல காதல்கள் இப்படியும் ஆகிவிடுவதுண்டு.
பாடல்கள் அவ்வளவாக எடுபடாமல் போனது பலத்தை குறைத்து மதிப்பிடச் செய்கிறது.ஆனால் ஆக்காட்டி ஆறுமுகம் பாடும் பழைய பாடல்கள் இந்தக்குறையை போக்குவதாக இருக்கிறது.பாண்டியை துவக்கத்தில் உதைக்கும் காட்சியும்,கல்லால் அடிக்கப்பட்டு ரத்தம் சிந்தும் காட்சியும் நெருடலை ஏற்படுத்துகிறது.தமிழ்சினிமா என்றால் ஏதாவது சண்டைக்காட்சி இருக்கவேண்டும் என்று நினைத்திருப்பார்கள் போல!ஆனால் விளைவுகள் வருந்தும் காட்சியை தோற்றுவிக்கிறது.வழக்கமான தமிழ்சினிமா போல இல்லாமல் நல்ல முயற்சி.இன்றைய சமூகத்திற்கு எத்தகைய குணங்கள் தேவை என்பதில் இயக்குநர் தெளிவாக இருக்கிறார்.இதற்காகவே பாண்டிராஜை தாராளமாக பாராட்டலாம்.
மெரினாவுக்கு பசங்கள கூட்டிக்கிட்டு போங்க சார்!
Reviewed by haru
on
February 13, 2012
Rating:
Reviewed by haru
on
February 13, 2012
Rating:





No comments